Monday, April 29, 2013

சிறிய யோசனை பெரிய பலன் !



தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலூகா கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்த பாலசுப்ரமணியன் காலை வேளையன்றில் தேடிச்சென்று சந்தித்தபோது வரப்பில் அமர்ந்தபடியே பேச ஆரம்பித்தார். பாலசுப்ரமணியன். “2 ஏக்கர்ல கரும்பும் 6 ஏக்கர்ல நெல்லும் சாகுபடி செய்து கொண்டு இருக்கேன். இதெல்லாம் தனியா இருக்குற ஒரு ஏக்கர்ல உளுந்து சோளம் போட்டடு இருக்கேன். தோட்டத்தோட வேலி ஒரத்துல நாட்டுத்தேக்கு, வேங்கை மரங்களைக் கலந்து நட்டு வைத்து இருக்கேன். இரண்டும் சேர்த்து மொத்தம் 70 மரங்கள் இருக்கு.

தோட்டத்துக்கு நாலு பக்க ஓரமுமே மேடா இருக்கு. நடுப்பகுதி பள்ளமா இருக்கு. அதனால, வேலி ஓர மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுறது ரொம்ப சிரமமா இருந்தது. அதில்லாம இப்போ இருக்கிற கரன்ட் பிரச்சனையில் பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சுறதே பெரிய விஷயமா இருக்கு. இதுல மரங்களுக்கு எப்படி பாய்ச்சுறது. ஆனா, இந்த கரன்ட் பிரச்சனையெல்லாம் வர்றதுக்கு முன்னயே தனித் தொழில்நுட்பத்தை நான் கண்டுபிடிச்சு பயன்படுத்த ஆரம்பிச்சுட்டேன். ஆரம்பத்தில், மண்பானையில சின்ன ஓட்டை போட்டு மரத்துக்குப் பக்கத்தில் வைத்து தண்ணீர் நிரப்பி இருந்தேன். அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் சொட்டிட்டே இருக்கும். அதுல என்ன பிரச்சனைன்னா, அடிக்கடி பானையில இருக்குற ஓட்டயில் மண் அடைச்சுக்கும். அதைச் சரி பண்றது பெரிய வேலையாயிடுச்சு.

இதுக்கு மாற்றா என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டே இருந்தேன். அந்த சமயத்துல நண்பர் ஒருத்தர் உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில இருந்தார். அவரைப் பார்க்க போயிருந்தப்போ, குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டிருந்தாங்க. அதுல சொட்டு சொட்டா குளுக்கோஸ் தண்ணீர் விழுந்துக்கிட்டிருந்துச்சு, அதைப் பார்த்ததும் எனக்கு பொறி தட்டிடுச்சு. அந்த பாட்டிலையும் டியூபையும் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்ச முடியுமானு யோசிச்சு செய்து பார்த்தேன். அது சரியா அமைஞ்சுடுச்சு. அடிப்பாகம் அகற்றப்பட்ட மினரல் வாட்டர் பாட்டில்களைக் கவிழ்த்து, கட்டித் தொங்கவிட்டு, அதில் குளுக்கோஸ் ஏற்றப் பயன்படும் குழாய்களைச் செருகி வைத்திருந்தார். பாட்டிலில் நிரப்பப்பட்டிருந்த தண்ணீர், குழாய்கள் மூலமாக சொட்டிக் கொண்டிருந்தது.

தொடர்ந்தவர், “குளுக்கோஸ் ஏத்தின பிறகு அந்த பாட்டில்களை சும்மாதான் போட்டு வைத்து இருப்பாங்க அதனால இந்த டியூப்கள் இலவசமாகவே கிடைக்கும், ஆனா, குளுக்கோஸ் பாட்டில்களோட கொள்ளளவு குறைந்தளவு அந்த பாட்டில் நமக்குப் பயன்படாது. அந்த டியூப் மட்டும் தான் பயன்படும் 2 லிட்டர் கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் கூல்டிரிங்க்ஸ் பாட்டில், வாட்டர் பாட்டில்களைப் பயன்படுத்திக்கலாம். பாட்டில்களோட அடிப்பாகத்தை நீக்கிடணும். டியூபை நல்லா சுத்தமா கழுவி பாட்டிலோட மூடிப்பகுதிக்கு அருகில் இணைக்கணும். இந்த டியூப்ல தண்ணீர்யோட அளவைக் கட்டுப்படுத்தறதுக்கு உருளை மாதிரியான ஒரு அமைப்பு இருக்கும். அது மூலமா ஒரு நிமிஷத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் விழுகுற மாதிரி அமைச்சுக்கிட்டா போதும் சொட்டுநீர்ச் சாதனம் தயார்.

கொஞ்சம் வளர்ந்த மரம்னா, அதோட கிளையிலேயே கம்பி மூலமா இந்த பாட்டிலைக் கட்டித் தொங்க விட்டுடலாம். நாம எளிதா தண்ணீர் நிரப்புற உயரத்துல தொங்க விட்டுக்கணும். சின்னக் கன்றுகளா இருந்தா பக்கத்துல ஒரு குச்சியை நட்டு, அதுல கட்டித் தொங்க விடலாம். காத்துல ஆடாம இருக்கற மாதிரி டியூபையும் மரத்தோட அடிப்பாகத்துல கட்டிடணும். கட்டும்போது டியூப் நசுங்கிடக் கூடாது. மரங்கள் பெருசான பிறகு, பெரிய கேன்களைத் தொங்க விட்டுக்கலாம். ஒரு தடவை தண்ணீர் நிரப்பிட்டா இரண்டு நாளைக்கு சொட்டிக்கிட்டே இருக்கும். அதனால இரண்டு நாளைக்கு ஒரு தடவை பாட்டில்கள நிரப்பினா போதும். இந்த மாதிரி தண்ணீர் விடுறப்போ சீரான இடைவெளியில் தண்ணீர் கிடைச்சுக்கிட்டே இருக்கும். அதனால வேருக்குத் தேவையான ஈரம் இருந்துக்கிட்டே இருக்கும். களைகளும் மண்டாது. 70 மரத்துலயும் இப்படி பாட்டில்களைக் கட்டி வைத்து இருக்கேன். அதை நிரப்புறத்துக்கு எனக்கு ஒரு மணி நேரம் தான் ஆகுது. அதோட கரன்ட் பிரச்சனை பத்திக் கவலையில்லை. எனக்கும் உடற்பயிற்சி மாதிரி அமைஞ்சுடுது .

தொடர்புக்கு
பாலசுப்ரமணியன்
திருவிடைமருதூர் தாலூகா
கோவிந்தபுரம் கிராமம்
தஞ்சாவூர் மாவட்டம்
செல்போன் 9965674223

1 comment:

  1. அருமை... பாலசுப்ரமணியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete